போதைக்காக தாயின் கால்களை உடைத்த மகன்; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்!
நாட்டில் இளையோரை போதையில் இருந்து கட்டுப்பட்டுத்த ஜனாதிபதி அனுரகுமார தலமையிலான அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.
இந்நிலையில் கேகாலை - தேவலகம பகுதியில் போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் தராததால் பெற்ற தாயின் கால்களைத் தடியால் அடித்து உடைத்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26ஆம் திகதி இக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

ஆத்திரமடைந்த இளைஞன் தடியால் தாக்குதல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கேகாலை - தேவலகம பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் போதைப்பொருள் வாங்குவதற்காகத் தனது தாயிடம் 5,000 ரூபா கேட்டுள்ளார்.
இந்நிலையில் பணம் இல்லை என தாய் கூறியதால் ஆத்திரமடைந்த இளைஞன், அருகில் கிடந்த தடியால் தாயின் இரு கால்களையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 46 வயதான தாயின் இரு கால்களும் முறிந்துள்ளன.
வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் தாயார் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பெற்ற தாய் என்றும் பாராமல் இந்த மிலேச்சத்தனமான செயலைச் செய்த அந்த இளைஞன், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார்.
அதேவேளை போதைப்பொருள் நுகர்வதற்காக தன் தாயிடம் பணம் கேட்டு வற்புறுத்தியதாகவும், மகனின் அச்சுறுத்தல் காரணமாக சில சமயங்களில் தாய் பணம் கொடுத்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைப் பிடிக்க தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.