மதுவரி திணைக்களத்தின் உத்தியோகத்தர்களில் 20 முதல் 30 சதவீதமானோர் மோசடியாளர்கள்
மதுவரி திணைக்களத்தின் உத்தியோகத்தர்களில் 20 முதல் 30 சதவீதமானோர் மோசடியாளர்கள் என இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் என்.எச்.பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த காலங்களில் எவ்வாறு செயற்பட்டார்களோ அவ்வாறே தற்போதும் செயற்பட்டுவரும் நிலையில், குறித்த பழைமையான பழக்கத்தை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரச வருமானம்
அகில இலங்கை மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 74ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பொருளாதாரம் மற்றும் அரச வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளில் மதுவரித் திணைக்களம் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடப்பாண்டில் 242 மில்லியன் ரூபாய் என்ற இலாப இலக்கினை மதுவரித் திணைக்களம் அடைந்துள்ளதாகவும், இந்த இலாபத்தை மேலும் அதிகரித்துக்கொள்ள முடியும் என்றும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மதுபான உற்பத்திகளை தடுப்பது மற்றும் அனுமதி பெற்ற மதுபான நிலையங்களிடம் இருந்து வரிகளை பெறுவது திணைக்களத்தின் பிரதான பணி என்றும் இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் என்.எச்.பிரேமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.