ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை - பிரான்ஸ் இடையே நேரடி விமானசேவை!
ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் பிரான்ஸ் மற்றும் இலங்கை இடையே நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UL 564 என்ற விமானம் 200 பயணிகளுடன் இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
குறித்த விமானம் நேற்று பிற்பகல் பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் இன்று அதிகாலை 04:55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமான சேவையை நேற்றைய தினம் முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
ஏயர்லைன்ஸின் இந்த சேவையானது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் பிரான்சின் பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையம் ஆகியவற்றுக்கு இடையே ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமையும் இடைவிடாமல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை கொழும்பில் இருந்து பாரிஸ் செல்லும் தொடக்க விமானம் ஒக்டோபர் 30 ஆம் திகதி கொழும்பில் இருந்து புறப்பட்டு 31 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் பாரிஸை சென்றடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.