உறுதிப்படுத்தல் இல்லாத சிம் அட்டைகள் முடக்கப்படும்; விடுக்கப்பட்ட அறிவிப்பு
நாட்டில் முறையான அடையாள விபரங்கள் உறுதிப்படுத்தப்படாத சுமார் 9 இலட்சம் சிம் அட்டைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளதாகவும், தேவையான தகவல்கள் சமர்ப்பிக்கப்படாவிடில் அவை முடக்கப்படும் என்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வீரரத்ன, தற்போதுள்ள அமைப்பில் 897,802 சிம் அட்டைகளுக்கு முறையான அடையாள உறுதிப்படுத்தல் இல்லை எனக் குறிப்பிட்டார்.

முறையான பதிவு விபரங்கள் இல்லாத சிம் அட்டை
2019ஆம் ஆண்டு சிம் பதிவு கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும், பதிவுத் தேவைகளை முறையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவும் இந்தப் புதிய விதிமுறைகள் இலக்கு வைத்துள்ளன.
தற்போது 245,811 வணிக ரீதியிலான சிம் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், பதிவு செய்யப்படாத சில சிம் அட்டைகள் பாரிய அளவிலான கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு நடவடிக்கைகளுக்குச் சரியான சந்தாதாரர் தரவுகள் அவசியம் எனத் தெரிவித்த அவர், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லாதது குற்றச் செயல்களுக்கு வழிவகுப்பதாக எச்சரித்தார்.
முறையான பதிவு விபரங்கள் இல்லாத சிம் அட்டைகளைப் பயன்படுத்துவோர், தேவையான தகவல்களை வழங்குமாறு அவர் வலியுறுத்தினார். தேவையான தகவல்கள் சமர்ப்பிக்கப்படாவிடில் சிம் அட்டைகள் செயலிழக்கச் செய்யப்படும் (Deactivation) என்றும் அவர் தெரிவித்தார்.