வவுனியாவில் கடைகளை அகற்றிய அதிகாரிகள் ; வெடித்த கடும் வாக்குவாதம்
வவுனியாவில் நடைபாதை கடைகளை அகற்றும் நடவடிக்கையின்போது, வியாபாரிகள் மற்றும் மாநகர சபை ஊழியர்கள் இடையே கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டன.
இலுப்பையடி மற்றும் வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிகளில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்துவந்த நடைபாதை வியாபாரிகளை அகற்றும் செயற்பாடு இன்று (14) வவுனியா மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டது.
கவனயீர்ப்பு போராட்டம்
மாநகர முதல்வர் சு.காண்டீபன் இதுகுறித்து தெரிவிக்கையில்,
போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு இடையூறாக இந்தக் கடைகள் இருந்ததால், அவற்றை அகற்றும் முடிவை மாநகர சபை எடுத்ததாக கூறினார்.
இதற்கு முந்தையதான கவனயீர்ப்பு போராட்டத்தின்போது, மாநகர சபை உறுப்பினர்கள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடைகளை அகற்றத் தொடங்கினர். இதனால் வியாபாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கிடையே முரண்பாடுகள் மற்றும் தள்ளுமுள்ளு நிலைகள் உருவாயின.
வியாபாரிகள் தமக்கான மேலும் கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.
ஆனால் மாநகர முதல்வர், ஏற்கனவே ஏப்ரல் மாதத்தோடு கடைகள் அகற்றப்பட வேண்டும் என்று அறிவித்திருந்தாலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், இனி கால அவகாசம் வழங்க முடியாது என உறுதியுடன் தெரிவித்தார்.
இதேநேரம், வன்முறைத் திருப்பங்களை தவிர்க்க, பொலிஸாரும் தலையிட்டு வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு, வியாபாரிகள் உடன்பாட்டுக்கு வந்து, வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகளை அகற்றினர்.