இலங்கையில் குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
இலங்கையில் பாதியளவான குடும்பங்கள், குழந்தைகளின் உணவு உட்கொள்ளலைக் குறைத்துள்ளதாக சேவ் தெ சில்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் குழந்தைகள் தொலைந்து போன தலைமுறையாக மாறுவதைத் தடுக்க அரசாங்கமும், உலக சமூகமும் செயல்பட வேண்டும் என சேவ் தெ சில்ரன் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மக்கள் பசி, மோசமான வறுமை மற்றும் அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் அவர்களின் துன்பத்தைப் போக்க சர்வதேச கடன் வழங்குனர்கள் இலங்கைக்கு கடன் நிவாரணம் வழங்க வேண்டும் என ஏற்கனவே சர்வதேச மன்னிப்புச்சபை கோரியிருந்த நிலையில், சேவ் தெ சில்ரனின் அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் பொருளாதாரச் சரிவு ஒரு முழு அளவிலான பசி நெருக்கடியாக மாறியுள்ளது. நாட்டில் உள்ள குடும்பங்களில் பாதி பேர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என குழந்தை உரிமைகள் தொண்டு நிறுவனமான சேவ் தெ சில்ரன் கூறுகிறது.
இலங்கையில் பாதி குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் உணவு உட்கொள்ளலைக் குறைத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில், 2,300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 27 சதவீதத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக பெரியவர்கள் உணவைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளனர்.
அதன்படி 10 குடும்பங்களில் ஒன்பது பேர் தங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர் எனவும் சேவ் தெ சில்ரன் சுட்டிக்காட்டியுள்ளது