இஷாரா செவ்வந்தி தொடர்பில் நேபாள நாட்டு பொலிஸார் வெளிப்படுத்திய அதிர்ச்சி தகவல்
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, "கணேமுல்ல சஞ்சீவ" கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் அறுவரை இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளதாக நேபாள நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேபாளத்தில் எந்த குற்றமும் செய்யாத காரணத்தால், அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மிகவும் அரிதான வழக்குகள்
பாதாள உலகத் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலையில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு சந்தேகநபர்களும், தற்போது நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அவர்களில் இஷாரா செவ்வந்தி, கொழும்பு குற்றப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற 05 சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நேபாள காவல்துறையுடன் ஒருங்கிணைந்த INTERPOL நடத்திய சிறப்பு நடவடிக்கைக்குப் பின்னர் குறித்த சந்தேகநபர்கள் காத்மாண்டுவில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் திட்டமிடப்பட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய கெஹல்பத்தர பத்மேவின் குழுவை சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.
சந்தேகநபர்கள் நேபாளத்தில் எந்த குற்றமும் செய்யாததால், நேபாள சட்டத்தின்படி அவர்களை நாடு கடத்த குடிவரவுத் துறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் தஞ்சம் புகுந்த இலங்கை பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் தொடர்பில், இதுபோன்ற வழக்குகள் மிகவும் அரிதானவை என்று சர்வதேச பொலிஸ் நிறுவனம் (INTERPOL) அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்த விரைவான நாடுகடத்தலுக்கு நேபாள காவல்துறைக்கும், இலங்கை தூதரகத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது என்றும் அந்த அறிக்கைகள் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.