தமிழர் பகுதியில் பொலிஸ் உயரதிகாரி உயிரை பறித்த சம்பவம் ; இரவில் நடந்த அசம்பாவிதம்
வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரட்டப்பெரியகுளம் - வவுனியா வீதியில் நேற்று (17) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வவுனியா வீதியில் 16 ஆம் ஒழுங்கைக்கு அருகில், இரட்டை பெரியகுளம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் இடதுபுறமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் ரக லொறியொன்றுடன் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலதிக விசாரணை
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், இவ்விபத்துத் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.