டெங்கு பரவலை வைத்து அரங்கேறும் மோசடி ; மக்களே அவதானம்
நாட்டில் டெங்கு பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து பல பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் போல நாடகமாடி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயற்பாடுகளில் மோசடிக்கார குழுவொன்று ஈடுபட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத் தலைவர் உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.
ஆகையால் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும், மோசடிக்காரர்களின் பிடியில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

பணம் பறிக்கும் மோசடி
மேற்படி விடயம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அண்மைய காலமாக நாட்டின் பல பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் போல நாடகமாடி நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் உள்ள நபர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடிகளில் ஒரு சில குழுவினர் ஈடுபட்டு வருகின்றமையைக் காணக் கூடியதாக உள்ளது.
அத்தோடு டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், வீடுகளை சோதனையிடும் நடவடிக்கையுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறி பொதுமக்களின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆகையால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
எந்தவொரு காரணத்துக்காகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையை முன்னிறுத்தி பணம் பெறுவதில்லை. ஆகையால் பொது சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி பணம் கோருபவர்கள் தொடர்பில் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் அளிக்கவும் என்றார்.