இறுதி வரை தலைநகரில் வீடு இன்றி வாழ்ந்த சம்பந்தர்
தனது 91 ஆவது வயதில் இயற்கை எய்திய தமிழ்த்தேசிய மூத்த தலைவர் சம்பந்தர் தனது அரசியலை ஒரு போதும் வியாபாரமாக்கவில்லை. அவர் பாராளுமன்ற அரசியலில் பிரவேசித்து ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாகிறது.
இருந்தாலும் தலைநகர் கொழும்பில் அவருக்கு என்று சொந்த வீடு எதுவும் கிடையாது. மேலும் அவர் ஆளுமை மிக்க சிறந்த சட்டத்தரணியாக இருந்தும் அரசியலுக்கு வந்த பின்னர், அரசியலை முழு நேரப் பணியாக மேற்கொண்டார்.
அதனைப் பகுதிநேரத் தொழிலாகக் கொள்ளவில்லை. மொத்தத்தில் தமிழரின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் சம்பந்தர். இதனால், வாடகை வீட்டில் அல்லது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அரசினால் வழங்கப்பட்ட வீட்டில் வசிக்க வேண்டி இருந்தது.
அவரது மூப்பு நிலை காரணமாக, அவ்வீட்டினை அவரால் மாற்றிக் கொள்ள முடியவில்லை.
இதனையும் கூட, சம்பந்தரால் பாராளுமன்ற அரசியலுக்குள் கொணர்ந்த சீடன் விமர்சித்து இருந்தார். அவர் அரச கட்டடத்தில் வாழ்கின்றார். பாராளுமன்றத்திற்குச் சமுகம் அளிப்பதில்லை. சம்பந்தரால் அரச நிதியம் பல இலட்சங்கள் செலவாகின்றது. இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் அதற்காகத் தான் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் எச்சரித்தார்.
சம்பந்தர் மூப்பினால் இயலாத நிலையில் இருக்கும் போது, உளவியல் ரீதியாக அவரது சீடன் சித்திரவதை செய்தார். மேலும்,14 ஆண்டுகள் பாராளுமன்ற அரசியவில் ஈடுபட்ட சம்பந்தரின் சீடனிடம் ஐந்து வீடுகள் கொழும்பில் உள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆனால் அந்த வீடுகள் சொந்தப் பெயரில் இல்லாமல் சொந்தங்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த வீட்டில் ஒன்றையாவது தன்னை அரசியலுக்குக் கொணர்ந்த, கொழும்பில வீடே இல்லாத தலைவருகருக்குக் கொடுத்து உதவ சீடன் முன்வரவில்லை.
ஆனால், சம்பந்தரைப் பதவி விலகத் தலையிடிகள் கொடுத்து, தனது சகாவிற்கு அந்த ஆசனத்தைக் கொடுக்க சீடன் செயற்பட்டார்.
இதனால், இறுதி நேரத்தில் சீடனின் சுயநலம் கண்டும், தனக்கு எதிரான செயற்பாடுகள் கண்டும் வேதனையுற்ற நிலையில், தன்னுயிரை தலைவர் விட்டுள்ளார்.
இறுதிக் காலத்தில் சம்பந்தர் கூறிய ஆலோசனைகள் எதனையும் சீடன் கேட்கவில்லை. மாறாகச் சம்பந்தரால் திருமலையில் அறிமுகம் செய்யப்பட்டவரை சம்பந்தருக்கு எதிரான ஆயுதமாகவே சீடன் பயன்படுத்தினார்.
தனது நோக்கம் இப்போதாவது நிறைவேறியதால், குதூகலம் அடைந்த சீடன், தற்போது அவரது இறுதிச் சடங்குகளில் அக்கறையோடு கவலையோடு செயற்படுவது போது நாடகமாடி வருகின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைத்த, தமிழசுக் கட்சியை நீதிமன்றத்தில் ஏற்றிய, கட்சியின் செயற்பாடுகளின் உத்வேகத்தை முடக்கிய சீடன், தமிழ்த் தேசியத்திற்கு எதிரான சிங்களத் தேசியத்திற்கு வேண்டிய விடயங்களை ஆர்வமாகச் செய்து வருகின்றார்.
இதற்கு வாலாட்டவும் பதவி மோகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அடுத்த மாகாண முதல்வர், மாநகர முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர் கனவுகளில் மிதக்கிறார்கள்.
ஒட்டுக் குழுக்களை மறைமுகமாக சீடன் வளர்த்து வருகின்றார். அவருடைய அடுத்த இறுதிக்கனவு வெளியுறவு அமைச்சர் அல்லது நீதியமைச்சராக அமையலாம்.
சர்வம் சர்வாதிகார மயம் சீடன் சுயநலமயம் என்பது மட்டும் புலனாகின்றது.