உக்ரைன் தலைநகரை விட்டு வெளியேறிய ரஷ்யப் படைகள்! அமெரிக்கா தகவல்
உக்ரைன் தலைநகரிலிருந்து ரஷ்ய துருப்புக்கள் முற்றாக வெளியேறியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 43 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வருகின்றது.
இதேவேளை, கிரெம்ளின் படைகள் உக்ரைனின் தலைநகரான கிவ்வில் இருந்து வெளியேறிவிட்டதாக மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து ரஷ்ய துருப்புக்களும் வெளியேறிவிட்டார்கள் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்” என அமெரிக்க அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைன் தலைநகரம் இப்போது "பாதுகாப்பானது" என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், வான்வழித் தாக்குதல்கள் தொடர்பான அச்சுறுத்தல்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கார்கிவில் உள்ள எரிபொருள் சேமிப்பு தளம் ரஷ்ய ஏவுகணைகளால் அழிக்கப்பட்டதாக கிரெம்ளினின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
அத்துடன் அதே பகுதியில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் சில உக்ரேனிய இராணுவ உபகரணங்கள் மற்றும் வெளிநாட்டு ஆயுதங்களையும் ரஷ்ய துருப்புக்கள் அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் சமீபத்திய வாரங்களில் ரஷ்யப் படைகளின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதலால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.