புடினின் நடவடிக்கையால் சினம் கொண்ட ரஷிய மக்கள்
போரின் பொருளாதார விளைவுகள் ரஷியாவை கடுமையாக பாதித்துள்ளன.ரஷிய குடிமக்கள் போருக்கு முன் அனுபவித்து வந்த பயன்களை இப்போது இழக்க தொடங்கி உள்ளனர்.
உக்ரைன் மீது நடத்தப்படும் ரஷியாவின் தாக்குதல் 10-வது நாளை எட்டியுள்ளது. உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரில் தொடர்ந்து ரஷிய படைகள் குண்டு மழை பொழிந்து வருகிறது.
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு நாடுகள், நிறுவனங்கள், அமைப்புகள் என பல்வேறு தரப்பும் ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.

உலக நாடுகள் தனிமைப்படுத்தினாலும், ரஷியா கண்டுகொள்ளாமல் தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. போரின் பொருளாதார விளைவுகள் ரஷியாவை கடுமையாக தாக்கத் தொடங்கியுள்ளன.
டாலருக்கு நிகரான ரஷிய பணமான ‘ரூபிள்’ மதிப்பு மிகவும் குறைந்துள்ளது. ரஷிய வங்கிகள் மீதான பொருளாதாரத் தடைகளால் ரஷிய நிதிச் சந்தைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இறக்குமதி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.ரஷிய சந்தையில் கடந்த வாரத்தில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களின் வெளியேற்றம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சாதாரண ரஷிய குடிமக்கள் போருக்கு முன் அனுபவித்து வந்த பயன்களை இப்போது இழக்க தொடங்கி உள்ளனர். இதன்படி நாடு முழுவதும் மில்லியன் கணக்கான ரஷியர்கள் கூகுள் பே மற்றும் ஆப்பிள் பே பயன்படுத்துகின்றனர்.

அன்றாட தேவைகளுக்கு அவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் வழியாக பயன்படுத்தும் இணைய வழி பரிவர்த்தனைகளை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. ரஷிய மக்களுடைய விசா - மாஸ்டர் கார்டு போன்ற ஏடிஎம் கார்டுகள் செயலற்று போயின.
இதுகுறித்து ரஷிய நபர் ஒருவர் கூறுகையில், “நான் வழக்கமாக போன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்வேன். ஆனால் இப்போது அவற்றை உபயோகப்படுத்த முடியவில்லை.
கூகுள் பே, ஆப்பிள் பே போன்றவற்றை பயன்படுத்த இயலவில்லை” என்றார். இந்நிலையில், கூகுள், பேஸ்புக் மற்றும் யூடியூப் உடன் இணைந்து ரஷ்ய அரசு ஊடகங்கள் அதன் தளங்களில் பணம் சம்பாதிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளன.
போர் பதற்றம் தொடங்கியதிலிருந்தே ஏ டி எம் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்தனர். ரஷ்ய வங்கிகள் மீதான பொருளாதாரத் தடைகளால் ரஷிய மக்களுடைய விசா மாஸ்டர் கார்டு போன்ற ஏடிஎம் கார்டுகள் செயலற்று போயின.
இதனை முன்கூட்டியே கணித்து அவர்கள் கிடைக்கும் பணத்தை கையில் எடுத்து கொள்ள முண்டியடித்தனர். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட அளவிலான தொகையை மட்டுமேஒருவர் எடுத்து கொள்ள முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பணத்தேவைக்கு கூட சிரமப்பட்டு வருகின்றனர்.
வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற ரஷியவாசிகள் இப்போது உலக நாடுகள் ரஷியாவிற்கு விமானம் இயக்க தடை செய்யப்பட்டுள்ளதால் திக்கற்ற நிலையில் உள்ளனர். சுமார் ஒன்றரை லட்சம் ரஷிய நாடவர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்கள் தங்கள் தாயகம் திரும்ப வழியின்றி திண்டாடி வருகின்றனர்.

இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் வரிசையில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் நிறுவனமும் ரஷியாவில் தங்கள் நிறுவன பொருட்கள் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
பிரபல விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ், நைக், பூமா போன்றவை ரஷியாவுடனான தங்கள் உறவை துண்டித்துள்ளன. இதன் காரணமாக அந்நிறுவன பொருட்களை வாங்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.
மேலும் பிரபல சினிமா பட நிறுவனங்களான யூனிவர்சல் பிக்சர்ஸ், சோனி, பாராமவுண்ட் பிக்சர்ஸ், வால்ட் டிஸ்னி கம்பெனி போன்ற ஹாலிவுட் நிறுவனங்கள் ரஷியாவில் தங்கள் சேவைகளை தடை செய்துள்ளன.
இதனால் பல திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிளை அங்கு ஒளிபரப்பு செய்யப்படாது. பொதுமக்களும் குழந்தைகளும் தாங்கள் விரும்பும் படங்களை பார்க்க முடியாத சூழல் உள்ளது.