அடுத்தடுத்த பேரிடி: புடின் அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனை ஒரு மாதத்தை கடந்தும் நீட்டித்துக் கொண்டு இருக்கிறது. இப்போர் மூலம் உக்ரைனின் பொருளாதாரம் 45.1% மும், ரஷ்யாவின் பொருளாதாரம் 11.2%மும் சரியலாம் என உலக வங்கி எச்சரித்துள்ளது.
இருப்பினும், இவ்விரு நாடுகளும் இன்று வரையிலும் தாக்குதலை நிறுத்திய பாடாக இல்லை. பல நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக பல தடைகளையும், கண்டனங்களையும் விதித்தாலும், ரஷ்யா அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
மாறாக தனது பொருளாதாரத்தினை எப்படி மீட்பது என்பது குறித்து கவனம் செலுத்தி வருகின்றது.
என்னதான் ரஷ்யா நடவடிக்கை எடுத்து வந்தாலும் பொருளாதாரத்தில் நிச்சயம் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ரஷ்யாவின் மீதான பொருளாதார தடை முதல் நிலக்கரி இறக்குமதி தடை வரையில். எந்த மாதிரியான தாக்கம் இருக்கும் என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
ஐரோப்பிய ஒன்றியமானது ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியினை கைவிட முடிவு செய்துள்ளது. இது ரஷ்யாவின் மொத்த இறக்குமதியில் 45% ஆகும்.
ஏற்கனவே பைடனின் அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் படிப்படியாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் கேஸ் கொள்முதலை குறைத்து கொள்வதாக கூறியிருந்தன.
இதற்கிடையில் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ரஷ்யாவில் புதிய முதலீடுகளுக்கும் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியும் ரஷ்யாவின் எரிபொருள் வணிகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தும் விதமாக சில தடைகளை விதித்துள்ளது.
குறிப்பாக ரஷ்யாவின் எரிபொருள் வணிகத்தில் தாக்கம் இருக்கும் விதமாக, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து ஜெர்மனியின் லப்மின் வரை பால்டிக் கடலுக்கு கீழே 1,200 கிலோ மீட்டர் நீளத்துக்கு நார்டு ஸ்ட்ரீம்-2 என்ற எரிவாயு குழாய் மூலம் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை கொண்டு செல்ல அமைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் பிராச்சனைக்கு மத்தியில் நார்டு ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் திட்டத்துக்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி நிறுத்தி வைத்துள்ளது.
ஜெர்மனி போன்ற நாடுகள் ரஷ்யாவிடமே அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக தடை விதிக்க தயக்கம் காட்டி வருகின்றன.
எனினும் அமெரிக்காவும், கனடாவும் எரிபொருள் மீதான தடையை விதித்துள்ளன. இதேபோல பிரிட்டனும் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிலக்கரி இறக்குமதியை தடை செய்ய திட்டமிட்டுள்ளன.
இது ஏற்கனவே கச்சா எண்னெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. ஜப்பானும் நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவின் கப்பல்களுக்கு தடை விதித்தது. அதேபோல ரஷ்யாவின் டிரக்குகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளன.
இதே போல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, கனடா, ஐஸ்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள், ரஷ்ய விமானங்களுக்கு தங்களது வான் வெளியை மூடிவிட்டன. இதுவும் ரஷ்யாவுக்கு பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 5வது சுற்று தடையாக 10.9 பில்லியன் டாலர் மதிப்பிலான உயர் தொழில்நுட்ப பொருட்கள் உள்பட பலவற்றிற்கும் தடை விதிகப்பட்டுள்ளன.
இது தவிர சில முக்கிய மூலப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ரஷ்யாவின் உற்பத்தியினையும் பாதிக்கலாம்.
ரஷ்யாவின் கடல் உணவுகள், ஓட்கா மற்றும் வைரம் உள்ளிட்ட பல பொருட்களுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. அதேபோல ரஷ்யாவில் எந்த புதிய முதலீடும் செய்யக் கூடாது என அமெரிக்கா தடை செய்துள்ளது. ரஷ்யாவின் முக்கிய அதிகாரிகள் மீதும் பொருளாதார தடையானது விதிக்கப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு ரஷ்யாவில் பிரச்சனையாக மாறக்கூடும்.
இதே நிதித்துறையில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தும் விதமாக, ரஷ்யாவின் வெளிநாட்டுக் கடனுக்காக, அமெரிக்க வங்கிகளில் வைத்திருக்கும் டாலர்களை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது.
இது ரூபிள்களையே பயன்படுத்தும் படியும் கட்டாயப்படுத்தியுள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகளாக Sberbank மற்றும் Alfa bank உள்ளிட்ட வங்கிகளின் மீதும் தடை விதித்துள்ளது அமெரிக்கா.
இது ரஷ்யா ரூபிளையே பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை அமெரிக்கா மட்டும் அல்ல, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யாவின் மத்திய வங்கியில் உள்ள வெளி நாட்டு கரன்சிகளையும் முடக்கியுள்ளன. மேலும் நிறுவனங்களுடனான அனைத்து பரிவர்த்தனைகளையும் தடை செய்துள்ளன.
அதே போல பெரும்பாலான ரஷ்ய வங்கிகளுக்கு ஸ்விப்ட் பரிவர்த்தனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் அமெரிக்காவின் மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவையும் தங்களது பேமெண்ட் நெட்வொர்க்குகளில் தடை விதித்துள்ளன.
மொத்தத்தில் இது ரஷ்யாவின் நிதி பரிவர்த்தனையை பெரிதும் முடக்கியுள்ளது. பணம் என்பது கைவசம் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது தவிர பல ரஷ்யர்கள் மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என பலவும் தடை விதித்துள்ளன. இது ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்துவதோடு, புதிய முதலீடுகளையும் தடை செய்யும்.
இதனால் தேவை சரியும், நுகர்வும் குறையும். பல்வேறு தடைகளினால் அந்த நாட்டின் சில முக்கிய உற்பத்தியும் பாதிக்கும். மொத்தத்தில் ரஷ்யா பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்திக்கலாம். இது ரஷ்ய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தினை எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.