போர் நிறுத்தத்தை மீறி மீண்டும் உக்ரைன் நகரை தாக்கும் ரஷ்யப் படைகள்!
உக்ரைனுக்கு எதிராக போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்த போதும், உக்ரைனில் இரண்டு நகரங்களில் ஒன்றான மேரியோபோலில் ரஷ்யா வெடி குண்டு தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக அந்நகர மேயர் வாடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார்.
இந்த துறைமுக நகரம் "முற்றுகையின் மிக கடினமான கட்டத்தில்" இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். “குடியிருப்புப் பகுதிகள் மீது தொடர்ந்து குண்டு வீச்சு நடந்துகொண்டிருக்கிறது.
விமானங்கள் குடியிருப்புப் பகுதிகள் மீது குண்டு வீசிக்கொண்டிருக்கின்றன,” என மேயர் வாடிம் பாய்சென்கோ கூறியதாக செய்தி ஊடகம் தெரிவிக்கிறது.
நகரை விட்டு வெளியேற முயலும் நேரத்தில் பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடப்பதாக அவர் கூறியுள்ளார்.
உக்ரைனில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல் தொடர்பை துண்டிக்கவேண்டும் என்ற இலக்கோடு இந்த நகரின் மீது தீவிர தாக்குதல் தொடுக்கப்படுகிறது.