சினிமாவை மிஞ்சிய சம்பவம்; ஓடும் ரயிலில் தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயிலுக்குள் வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளை கும்பல் கணவனை வாளால் வெட்டிவிட்டு மனைவியை தாக்கி தங்க நகை மற்றும் லட்சம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையிட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (06) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்கள் இருவரும் ஓடும் புகையிரதத்தில் இருந்து குதித்து தப்பிய நிலையில் அவர்களில் ஒருவரை காயங்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஓடும் ரயிலில் வாள்வெட்டு
சம்பவம் குறித்து தெரியவருகையில் அதிகாலை 05.30 மணியளவில் அங்குலான புகையிரத நிலையத்தில் கொழும்பு மாத்தறை புகையிரதம் அண்மித்துள்ளது. இதன்போது கொள்ளையர்கள் இருவரும் புகையிரதத்தில் ஏறியுள்ளனர்.
கொள்ளையர்கள் குறித்த ஒரு புகையிரத பெட்டியில் அமர்ந்திருந்த கணவன் மற்றும் மனைவியை அச்சுறுத்தி பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுள்ளனர்.
அதன் பின்னர் கணவனின் பணப் பையை பெறுவதற்கு கொள்ளையர்கள் முயன்றுள்ளனர். அதற்கு கணவன் தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய போது அவரை கொள்ளையர்கள் வாளால் வெட்டியதுடன் மனைவியையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து கணவனின் பணப்பையை கொள்ளையர்கள் கொள்ளையிட்ட நிலையில் புகையிரதத்தில் இருந்த ஏனைய பயணிகள் அங்கு ஓடி வந்தனர். இதனையடுத்து கொள்ளையர்கள் இருவரும் ஓடும் புகையிரதத்தில் லுனாவை பகுதியில் வைத்து குதித்துள்ளனர்.
பொலிஸார் அதிரடி
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் உடனடியாக 119 அவசர அழைப்பு இலக்கத்துக்கு தகவல் பரிமாற்றப்பட்டுள்ளது. மொறட்டுவை பொலிஸார் கொள்ளையர்கள் தப்பிய இடத்துக்கு விரைந்த போது அங்கு காயம் காரணமாக கொள்ளையர்களில் ஒருவர் விழுந்து கிடந்துள்ளார்.
அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மற்றைய சந்தேக நபர் தங்கச் சங்கிலி, 2 இலட்சம் ரூபா உள்ளடங்கிய பண பையுடன் தப்பிச் சென்றுள்ளார்.
மொறட்டுவ பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக மன்னாரில் இருந்து மொறட்டுவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தம்பதியினரே இச்சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த தம்பதியினர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கைதான சந்தேக நபர் போதைப் பொருளுக்கு அடிமையான பல குற்றச் செயல்களுக்காக விளக்கமறியலில் இருந்து விடுதலை பெற்றவர் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் மேற்பார்வையில் சிறப்பு குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.