ஜனாதிபதி ரணில் மீது ஆளும்தரப்பினர் சிலர் அதிருப்தி!
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுக்கள் வழங்கப்படும் எனவும் அரச மேல்மட்டத்தில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் காலவரையறையின்றி தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஒரு சில விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்படாததை அடுத்தே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஆளுந்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் பதவியில் மாற்றம்
குறிப்பாக பிரதமர் பதவியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என பொதுஜன முன்னணியின் ஒரு தரப்பு வலியுறுத்திய போதிலும் அதில் மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி ரணில் இணக்கம் தெரிவிக்கவில்லையாம்.
இது குறித்து பசில் ராஜபக்ஷவிடம் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கவலைகளை முன்வைத்த போதிலும், புதிய அமைச்சர்களை நியமிப்பது ஜனாதிபதியிடம் தான் உள்ளது என அவர் வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டாராம்.
இதனை அடுத்து ஆளுந்தரப்புக்குள் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.