ரோயல் பார்க் கொலை சம்பவம்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அழைப்பாணை
ரோயல் பார்க் கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றத்தால் இன்று (11) அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி, ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள றோயல் பார்க் தொடர் மாடி வீடமைப்பு தொகுதியில் 19 வயதான இவோன் ஜோன்சன் என்ற வெளிநாட்டு யுவதி கொலை செய்யப்பட்டிருந்தமை தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு குறித்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
ரோயல் பார்க் கொலை வழக்கு
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக, இந்த அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவருக்கு தண்டனை வழங்காமல் இருப்பதற்கான காரணத்தை ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒரு மாதத்திற்குள் ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன, மைத்திரிபால சிறிசேன இன்றுவரை அந்தத் தொகையை செலுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த இழப்பீட்டை செலுத்தத் தவறியதற்காக தண்டிக்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தை முன்வைக்குமாறு கோரி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.