வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் தென்மேற்கு பருவநிலை காரணமாக, பல பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்பிலும், கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்பிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.