ருமேனியாவில் வேலைவாய்ப்பு : பல மில்லியன் மோசடி செய்த இலங்கை பெண் கைது!
ருமேனியாவில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி 2 மில்லியன் ரூபாவை மோசடி செய்த பெண் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) விசேட புலனாய்வுப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) கைது செய்துள்ளனர்.
கந்தானை பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் முன்னர் இதேபோன்ற குற்றத்திற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவர் என்பதும் பின்னர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், கைது தொடர்பில் அவர் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இவ்வாறான மோசடிகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதால், வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக பணம் கோரும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
எனவே, சட்டரீதியாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தொடர்பான மேலதிக விவரங்களைப் பெறுவதற்கு, மக்கள் www.slbfe.lk ஊடாக SLBFE இணையத்தளத்தைப் பார்க்குமாறும் அல்லது அவர்களது தொலைபேசி இலக்கமான 1989 ஐ அழைக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.