கூரிய ஆயுதங்களை காட்டி முச்சக்கர வண்டிகள், ஆபரணங்கள் கொள்ளை; மக்களே அவதானம்
கொழும்பின் பல பகுதிகளில் கூரிய ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தி வாடகைக்கு செல்வதாக கூறி முச்சக்கர வண்டிகள், ஆபரணங்கள் உள்ளிட்ட சொத்துக்களை திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அருணோதய மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். சந்தேக நபர் இராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவராவார்.
முச்சக்கர வண்டிகள் , தொலைபேசிகள், தங்க ஆபரணங்கள்
சந்தேக நபர் பேலியகொட, களனி, கடவத்தை, பொரள்ளை மற்றும் மிரிஹான ஆகிய பகுதிகளில் முச்சக்கர வண்டிகள் , கையடக்கத் தொலைபேசிகள், தங்க ஆபரணங்கள் போன்றவற்றை கொள்ளையடித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொள்ளையிடப்பட்ட பொருட்கள் சில தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.