நாட்டில் இடம் பெற்ற வீதி விபத்துக்கள்; 6 பேர் பலி
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
வீதியோரம் நடந்து சென்ற சிறுவன் மீது கார் மோதியதில் சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் குளியாபிட்டிய நாரம்மல வீதியில் பொஹிங்கமுவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
கிதலவ பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை நுவரெலியா பேருந்து நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட போது பாதசாரி ஒருவர் மீது பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
எல்ல வெல்லவாய வீதியின் அம்வத்த பகுதியில் நாய் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் பெரியமுகத்துவாரம் பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கவிழந்து ஏற்பட்ட விபத்தில் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இரத்தினபுரி பெல்மடுல்ல வீதியின் பட்டுகெதர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கொங்கிறீட் தூணில் மோதியதில் பலத்த காயமடைந்த ஓட்டுனர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லவாய தனமல்வில வீதியில் தெளுல்ல கொலனி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் படுகாயமடைந்த வேனின் சாரதி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.