கடல்மார்க்காக நாடு திரும்பியவர் கைது
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக திரும்பி வந்த ஒருவரை இலங்கை கடற்படையினர் நேற்று கைதுசெய்துள்ளனர். அத்துடன் சந்தேக நபருக்கு பயணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தமைக்காக மேலும் நான்கு நபர்களும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சென்று சிறிய படகொன்றில் மன்னாருக்கு திரும்பும் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் என்றும் ஏனையவர்கள் மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் அனைவரும் அந்தப் பகுதியின் பொது சுகாதார ஆய்வாளர்களின் உத்தரவுக்கு அமைவாக தனிமைப்படுத்துமாறும் பணிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளனர்.