மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில்சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய அறிக்கை
ஐக்கிய இராச்சியம் தலைமையிலான பல நாடுகள் கூட்டாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று (03) இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளன.
ஐக்கிய இராச்சியத்துடன் கனடா, மலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இந்த வாய்மொழி அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செயல்பாடுகள்
கடந்த ஆண்டு நடைபெற்ற அமைதியான தேர்தல்கள் தொடர்பாகவும், தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் தொடர்பாகவும் இந்த அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
நிலங்களை மீள ஒப்படைத்தல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், வீதித் தடைகளை அகற்றுதல் மற்றும் வடக்கு கிழக்கு சமூகத்திற்கு கடந்த காலத்தை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்குவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் அங்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கப்படுவதுடன், அந்த சட்டங்கள் சர்வதேச கடமைகளுக்கு இணங்க நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து குடிமக்களின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.