வீடு வாடகைக்கு பெற்று பாரிய நிதி மோசடி ; சீன மற்றும் வியட்நாம் பிரஜைகள் அதிரடியாக கைது
இணையத்தளம் ஊடாக பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த சீன மற்றும் வியட்நாம் பிரஜைகள் குழுவொன்று, காலி - போத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து செவ்வாய்க்கிழமை (24) மாலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி திசாபதி பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிநவீன ஸ்மார்ட் கைபேசிகள் 84, மடிக்கணினி 01, கணினி 01
சந்தேக நபர்களிடமிருந்து மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட அதிநவீன ஸ்மார்ட் கைபேசிகள் 84, மடிக்கணினி 01, கணினி 01 கைப்பற்றியுள்ளனர்.
பூஸா இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து, காலி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த விசேட தேடுதல் வேட்டையை முன்னெடுத்தனர்.
வெளிநாட்டவர்கள் நீண்டகாலமாக இந்த வீட்டை வாடகைக்கு பெற்று தங்கியிருந்து, இணைய வழி ஊடாக பல்வேறு நிதி மோசடிகளை செய்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக போத்தல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.