உயிரிழந்த விமானி தொடர்பில் உருகவைக்கும் தகவல்!
வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய (Nirmal Siyambalapitiya) தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உருகவைக்கும் பதிவுகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
அந்த பதிவில் , சின்னஞ்சிறு மகனின் அன்புக்குரிய தந்தையான நிர்மால், DITWA புயலினால் தனது உயிரை அகாலமாகப் பலியிட்ட இலங்கையர்களுடன் நேற்றைய தினம் இணைந்துகொண்டார் .
விலைமதிப்பற்ற இலங்கையின் விமானியாக... நாட்டின் இதயங்களில் அழியாத நினைவை வைத்துவிட்டு சென்றுவிட்டார் என பதிவிடப்பட்டுள்ளது.

ஆற்றில் வீழ்ந்து விபத்து
சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே ஹெலிகொப்டர் விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று (30) மாலை இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் - 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று வென்னப்புவ லுணுவில பாலத்திற்கு அருகில் இருந்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஹெலிகொப்டர் அருகில் உள்ள ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தின்போது விமானிகள் இருவர் உட்பட 5 விமானப்படை உறுப்பினர்கள் ஹெலிகொப்டரில் இருந்துள்ளனர்.

பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து அவர்களை உடனடியாக மீட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய (Nirmal Siyambalapitiya) உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி (Nirmal Siyambalapitiya) என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் மேலும் நான்கு விமானப்படை அதிகாரிகள் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அதேவேளை டிட்வா புயலின் கோர தாண்டவத்தால் இலங்கையில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல் போனவர்கள் 366 எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 25 மாவட்டங்களில் 309,607 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,118,929 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.