தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை...வடக்கு ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆவணம்!
நீண்டகாலமாக சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (Jeevan Thiyagaraja) அரசியல் கைதிகளின் விபரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன், அரசியல் கைதிகளின் விபரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றையும் ஜனாதிபதிக்கு அனுப்பியிருக்கின்றார்.
இந்நிலையில் வடமாகாண ஆளுநருக்கும் அத்தகைய ஆவணம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதுடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
குறித்த ஆவணத்தில் வழக்குகள் நிறைவுற்றும் காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் நீண்ட காலமாக வழக்குகள் இடம்பெற்று வருகின்ற கைதிகள் உள்ளிட்ட 46 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு மேற்படி ஆவணத்தில் ஆளுநரினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடமாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்ட சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில் ஏற்கனவே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் ஆளுநர் தொலைபேசி வாயிலாக உரையாடியிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் முன்னாள் நீதி அமைச்சர் அலிசப்ரியுடனும்
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஆளுநர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.