நாட்டின் இன்றைய சாபத்துக்கு காரணம் இதுவே!
யாழ்.காங்கேசன்துறையில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித பூசை வழிபாடுகளும் இன்றி இந்து ஆலயங்கள் பூட்டப்பட்டு கிடக்கின்றமையே நாட்டின் இன்றைய சாபத்திற்கு காரணமென சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் கூறினார்.
நேற்றைய தினம் யாழ்.வந்த இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையை நல்லை ஆதீன குருமுதல்வர் சன்னிதானத்தில் சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
காங்கேசன்துறை பகுதியில் மக்களின் காணிகளை பறித்து ஆடம்பர ஜனாதிபதி மாளிகை கட்டியுள்ளபோதும் அங்கு மக்களை இன்னும் மீள் குடியேற்றம் செய்யவில்லை.
ஆனால் அப்பகுதியில் காணப்படுகின்ற நான்குக்கு மேற்பட்ட இந்து ஆலயங்கள் இன்னும் பூசை வழிபாடுகள் இன்றி பூட்டப்பட்ட நிலையில் அதனுடைய சாபங்களே இன்றைய நாட்டின் நிலைமைக்கு காரணணமெனவும் அவர் கூறினார்.
அங்குள்ள சடையம்மா மடம், விஷ்ணு கோயில் மற்றும் சிவன் கோயில் உட்பட அப்பகுதியில் பல இந்து ஆலயங்கள் இருக்கின்ற நிலையில் ஆட்சியாளர்கள் அதனை விடுவித்து பூசை வழிபாடுகள் இடம் பெற அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம் நாங்கள் எவ்வித அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல மதத்தலைவர்கள் என்ற ரீதியில் மக்களுடைய பிரச்சினைகளை தெளிவாக எடுத்துரைத்தோம்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மக்கள் தீர்வு விடையத்தில் அக்கறையாக உள்ள நிலையில் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்குரிய தீர்வும் காணப்பட வேண்டும் எனவும் மேலும் ஆறு திருமுருகன் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
யாழ் நல்லூரானை தரிசித்தார் பாஜக அண்ணாமலை