யாழ் மீனவர்களின் வலையில் சிக்கிய அரியவகை புள்ளி சுறா!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் மீனவர் வலையில் பிடிபட்ட அரியவகை ராட்சத புள்ளி சுறா மீன் கடலுக்குள் விடப்பட்டது.
கட்டைக்காடு பகுதியில் கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையிலேயே மிகப் பெரிய கோமராசி மீன் ஒன்று அகப்பட்டுள்ளது. சுமார் 8 அடி நீளம் கொண்ட இந்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டி இழுத்து வந்தனர்.
கோமராசி அல்லது புள்ளிச் சுறா என அழைக்கப்படும் மீனை வலையில் இருந்து அகற்றி மீனவர்களால் மீண்டும் கடலினுள் விட்டனர். இந்நிலையில் ஆழ்கடலில் வசிக்கும் இந்த மீன்கள் சில நாட்களாக கரைக்கு வந்து போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் வலைகளுக்கு நடுவே அதிகளவான மீன்கள் வந்த போதிலும் கோமராசி மீனின் வருகையால் மீன்கள் எதுவும் பிடிபடவில்லை எனவும் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.