யாழ் புத்தூரில் ரணில் அரசாங்கத்தை கண்டித்து தீப்பந்த போராட்டம்!
யாழ்ப்பாணம் - புத்தூரில் ரணில் அரசாங்கத்தின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி என கண்டித்து தீப்பந்த போராட்டத்தில் மக்கள் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் (17-03-2023) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசு பொருட்களின் விலைகளை அதிகரித்து சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து வருவதாக தெரிவித்து கைகளில் தீப்பந்தங்களை தாங்கியவாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
200% மின்சார கட்டண உயர்வை கைவிடு. உணவு எரிபொருள் விலையை குறை, உழைக்கும் மக்களை பட்டினிக்குத் தள்ளாதே, அடக்குமுறைகளை ஏவி மக்களை ஒடுக்காதே! உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியும் பதாகைகளைத் தாங்கியவாறும் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் இந்த போராட்டத்தில், புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.க செந்திவேல், வலி.கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், பிரதேச சபை உறுப்பினர் செல்வம் கதிர்காமநாதன் உள்ளிட்டவர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்.