கோட்டாவின் கடனை அடைக்கும் ரணில் அரசாங்கம்!
கோட்டாபாய ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களை ரணில் அரசாங்கம் அடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி கடந்த ஜனவரிக்கு முன்னர் அனைத்து ஒப்பந்தக்காரர்களினதும் நிலுவைத் தொகைகளை முற்றாக செலுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கோட்டா பெற்ற உள்நாட்டுக் கடன்
கொழும்பில் நடைபெற்ற தொழில்சார் நிபுணர்களின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன்களை ரணில் அரசாங்கம் அடைத்துக் கொண்டுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் நெடுஞ்சாலைகள் நிர்மாணம், இராணுவத்தினருக்கு உணவுப் பொருள் வழங்கல் போன்ற முக்கிய விடயங்களின் ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மேலாக கொடுப்பனவுகளை நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக இலங்கை எங்கும் நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதுடன், அரசாங்கத்திற்கான வழங்கல் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.