தங்கள் படகுகளை காண யாழ்ப்பாணம் வந்த இராமேஸ்வரம் மீனவர்கள்
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டியபோது கைப்பற்றப்பட்டு நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களின் 14 படகுகளின் உரிமையாளர்கள் தங்கள் படகுகளைப் பார்வையிடக் கடல் வழியாக இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளில் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட படகுகளைப் பார்வையிடவே தமிழக மீனவர்கள் வருகை தந்துள்ளனர்.
நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட படகு உரிமையாளர்கள் 14 பேரும் இன்று தனியான படகில் யாழ். மயிலிட்டிக்கு வருகை தந்துள்ளனர்.
இராமேஸ்வரம் பகுதியில் இருந்து வருகை தந்த விசைப்படகு உரிமையாளர்கள் தங்கள் படகுகள் திருத்தம் செய்யும் நிலையில் உள்ளதா அல்லது கட்டி இழுத்துச் செல்ல முடியுமா என்பது தொடர்பில் பரிசீலிக்கவுள்ளனர்.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தமிழக மீனவர்கள் இன்றும் , நாளையும் தங்கியிருந்து படகுகளைப் பரிசீலித்த பின்னர் மீண்டும் இராமேஸ்வரம் திரும்பவுள்ளனர்.
அதேவேளை அவர்களின் படகுகளில் அதிகளவான படகுகள் சேதமாகியே காணப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.