பாவத்திற்கான மிகப்பெரிய தண்டனையை அனுபவித்து வருகிறார் ராஜபக்ஷ! விஜயகாந்த
நாட்டில் இனப்படுகொலை செய்த பாவத்திற்கு ராஜபக்ஷ மிகப்பெரிய தண்டனையை அனுபவித்து வருகிறார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் (Vijayakanth) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வன்முறை வெடித்துள்ள நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.
ஒரு இனத்திற்காக போராடிய விடுதலைப் புலிகளின் தலைவரை இரக்கமற்ற முறையில் கொலை செய்து, அத்தனை மக்களையும் கொலை, கொள்ளை, பலாத்காரம் செய்து மிக கொடூரமாக நடந்து கொண்ட ராஜபக்ஷவிற்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை. செய்த பாவத்திற்கு ராஜபக்ஷ தண்டனையை அனுபவித்து வருகிறார்.
இனப்படுகொலை செய்யப்பட்ட போது தமிழீழ மக்கள் ஒவ்வொருவரின் வயிறு எப்படி எரிந்ததோ, அந்த சாபம் தான் இன்றைக்கு இலங்கையே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
விடுதலைப் புலிகளின் தலைவருக்கு செய்து கொடுமைகளுக்காகவும், அப்பாவி தமிழர்களை கொன்றதற்காகவும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு கிடைத்த தண்டனையாக தான் இதை பார்க்கப்படுகிறது.
இன்று தான் விடுதலைப் புலிகளின் தலைவர், அவருடன் இறந்த அனைத்து தமிழீழ மக்களின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும். எனவே, அந்த மக்களை இன்று நாம் நினைத்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.