தமிழர் பகுதியில் தவித்த மாணவி ;மருத்துவரின் அலட்சியம்... தந்தையின் ஆதங்கம் ;நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை காரணமாக மாணவி ஒருவர் பெரும் இன்னலுக்கு முகம் கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு இன்றைய தினம் (11) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோயாளர் காவு வண்டி
இந்நிலையில், அவரை, மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நோயாளர் காவு வண்டியின்றி வைத்தியசாலை நிர்வாகம் காணப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது பெற்றோரும் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர் .
இன்று காலை உடையார் கட்டில் உள்ள பாடசாலைக்குச் சென்ற இந்த மாணவி உடல்நலக் குறைவு ஏற்பட, உடனடியாக பாடசாலை நிர்வாகத்தினர் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பின்னர் மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மாணவியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
எனினும் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாணவியை கொண்டு செல்வதற்காக, நோயாளர் காவு வண்டியை எதிர்பார்த்து மாணவியும் பெற்றோரும் காத்திருந்துள்ளனர்.
சுமார் 3 மணிநேரத்தின் பின் மாணவியின் தந்தை, வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியரிடம் சென்று தாம் காத்திருக்கும் விடயத்தை கூறியுள்ளனர்.
அதற்கு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை காணப்படுவதாக கூறியதோடு, காத்திருக்க கடினமெனில், சுய விருப்பத்தின் பேரில், சொந்த செலவில் மாணவியை அழைத்துச் செல்லுமாறும் மாணவியின் தந்தையிடம் வைத்தியர் கூறியுள்ளார்.
அதன் பின்னர், மாணவியை அவரது தந்தை, தன் சொந்த செலவில் மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பார்த்தபோது, மாஞ்சோலை வைத்தியசாலை வளாகத்தில் நோயாளர் காவு வாகனங்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக மாணவியின் தந்தை கூறியுள்ளார்.