மன்னாரில் தொடர்ச்சியாக திருடி வந்த நபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!
மன்னார் பகுதியில் பல வீடுகளில் தொடர்ச்சியாக பெறுமதி மிக்க நீர் இறைக்கும் இயந்திரம் திருடி வந்த நபரை பொலிஸாரின் உதவியுடன் பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் நானாட்டான் பிரதேசத்தில் இன்றைய தினம் (01-03-2023) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
நானாட்டான் பிரதேசத்தில், உள்ள கிராமங்கள் சிலவற்றில் தொடர்ச்சியாக நீர் இறைக்கும் இயந்திரம் திருடப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சந்தேகத்தில் அருவி ஆற்றங்கரையில் உள்ள தோட்டம் செய்யும் வீட்டு வளவை சோதனை செய்த போது திருடப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக உடனடியாக முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த முருங்கன் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர் இராசமடு அருவி ஆற்றங்கரையில் வசிக்கும் 39 வயது மதிக்கத்தக்க நபர் எனவும் குறித்த நபரிடம் இருந்து மூன்று நீர் இறைக்கும் இயந்திரம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.