தையிட்டி விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம்
யாழ்ப்பாணம் - வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸவிகாரைக்கு எதிராக இன்றும் (6) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி,கோஷமிட்டு, கைகளில் கறுப்பு கொடிகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன், பொது மக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.