சீரற்ற காலநிலையால் பரீட்சைக்கு எழுதும் மாணவர்களுக்கு சிக்கல்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன் விடைத்தாள்கள் நனைந்ததால் சில மாணவர்கள் பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதிகாரிகள் நேற்றைய சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
அத்துடன் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.
மேலும் சீரற்ற காலநிலையால் மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.