சிறை சம்பவங்கள்;அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை
கடந்த நாட்களில் நாட்டின் சில சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, அது தொடர்பான அனைத்து நிறுவனப் பிரதானிகளுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, குறித்த கலந்துரையாடலுக்காக சிறைச்சாலைகள் திணைக்களப் பிரதானிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சிறைக் கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முறையான பொறிமுறையொன்றைச் செயற்படுத்த அரசாங்கம் தவறினால், இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என நிமல் ஜி.புஞ்சிஹேவா எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.