உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்!
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால் உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள மற்றும் விதிக்கப்படவுள்ள வரிகளுக்கு மத்தியில், தங்கத்தின் விலை கிறியுள்ளதால் தங்கத்தில் முதலீடு செய்வோர் மற்றும், நகைப்பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.
உலகில் , ரொக்கமாக விற்கப்படும் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 2,945 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விலை வரலாற்றில் மிக உயர்ந்த விலை
2025 ஆண்டின் ஆரம்பித்திலிருந்து, உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் மிக உயர்ந்த விலையை 9 முறை தாண்டியுள்ளது.
கடந்த 30 நாட்களில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 161 டொலர்களும், கடந்த ஆறு மாதங்களில் 407 டொலர்களும் அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கத்தின் விலை இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு முக்கிய காரணம், ஆட்டோமொபைல் மற்றும் வைத்திய பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்ததே தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என சர்வதேச சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
3,000 அமெரிக்க டொலருக்கு மேல் நிலையாக இருக்கும்
இந்நிலையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 3,000 அமெரிக்க டொலருக்கு மேல் நிலையாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை உயர்வுக்கு பங்களித்த பிற காரணிகளில் கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் எதிர்பார்க்கப்படும் பணவீக்க அழுத்தங்கள் ஆகியவை அடங்கும்.
வட்டி வீதங்கள் குறைந்து வருவதும் தங்கத்தின் மீதான ஈர்ப்பை அதிகரித்துள்ளது.
அதேவேளை ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்பட்ட புவிசார் அரசியல் சூழலை எதிர்கொண்டு தங்கத்திற்கான தேவை அதிகரித்ததன் மூலம் உலக சந்தையில் தங்கத்தின் விலைகள் உயரும் போக்கு 2022 இல் ஆரம்பமானது.