ஜனாதிபதி ரணிலுக்கு நள்ளிரவுக்கு பின்னர் கிடைக்கவுள்ள அதிகாரம்!
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இன்றைய தினம் (20-02-2023) நள்ளிரவுக்குப் பின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) கிடைக்கப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசியலமைப்பின் 70 (1) உட்பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அரசியலமைப்பின் 70 (1) (அ) உறுப்புரையின் பிரகாரம், தற்போதைய நாடாளுமன்றம் முதல் முறையாக கூடுவதற்கு நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து 2 ஆண்டுகள் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில், நாடாளுமன்றத் தீர்மானம் மூலம் கோராதபட்சத்தில் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) தலைமையில், 9அவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு 2020 ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி கூட்டப்பட்டது.
இந்த முதல் அமர்வு இடம்பெற்று இன்று நள்ளிரவுடன் 2 வருடம் 6 மாதங்கள் நிறைவடைகின்றது.
இந்த நிலையில், கோட்டாபயவின் பதவி விலகலின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதியான ரணிலுக்கு, அரசியலமைப்பின் 70 1 (அ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை கோட்டாபய, 2020 மார்ச் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக, 2020 ஓகஸ்ட் 5 ஆம் திகதி குறித்த தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.