இந்தியப் பிரதமர் பதவியேற்பில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில், நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (05) பிற்பகல், நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அழைப்பு விடுத்த மோடி
இந்நிலையில் தனது பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தற்போதைய இந்திய அரசாங்கத்தின் கடைசி அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ரஷ்தபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக சனிக்கிழமை பதவியேற்க உள்ளார்.
அதேவேளை இந்திய பிரதமர் பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவும் பங்கேற்க உள்ளார்.