இந்தியா செல்லவுள்ள இலங்கை ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய விஜயத்தில் இணைய உள்ளவர்கள்
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதி செயலணியின் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோரும் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது பல துறைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என்பதும் விசேட அம்சமாகும்.
இதற்கிடையில் இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்திற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.