டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்; ஜனாதிபதி நிதியம் நிதியுதவி!
நாட்டை புரட்டிப்போட்ட டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 (சுமார் 192 கோடி) ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் தற்போது அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் ஊடாகப் பிரதேசச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறைசேரியிலிருந்து 15,000 ஜனாதிபதி நிதியத்திலிருந்து 10,000
பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக, அரசாங்கத்தினால் ஒரு மாணவருக்கு மொத்தம் 25,000 ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதில், திறைசேரியிலிருந்து 15,000 ரூபாவும் மற்றும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 10,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய அம்பாறை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு தற்போது முழுமையாகக் கொடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான குறித்த நிதியுதவியும் விரைவில் வழங்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.