சிறையிலுள்ள போதைப்பொருள் வியாபாரிகளுடன் அரசியல் தலைவர்கள் தொடர்பு ; வெளிப்படுத்திய ஜனாதிபதி அநுர
சிறைச்சாலையிலுள்ள முக்கிய போதைப்பொருள் வியாபாரி ஒருவருடன் நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்கள் 92 தடவைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நாட்டில் அச்சுறுத்தலாக விளங்கிய இலக்கத் தகடுகள் அற்ற 'வெள்ளை வான்' கடத்தல்கள் மற்றும் வீடுகள் உடைக்கப்படுவதற்கு எதிராகப் போராடியவர்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் யாவும் அரசியல் தேவைகளுக்காக அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட அநாகரிகமான குற்றங்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

அநாகரிகமான அரசியல்
கடந்த காலங்களில் அரங்கேறிய தாஜுதீன் மரணம் , உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான குண்டுவீச்சுகளுக்குப் பின்னணியில் அரச அதிகாரப் பின்னணியைக் கொண்ட ஒரு சிறிய குழுவே செயற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய அநாகரிகமான அரசியல் மற்றும் நாடாளுமன்ற கலாசாரத்தை மாற்றி, நாட்டை நாகரிகமான பாதையில் கொண்டு செல்ல தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
யாழில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் ; TIN இலக்கம் பெறவுள்ளோருக்கு அரசாங்க அதிபரின் முக்கிய தகவல்
கடந்த மூன்று, நான்கு தசாப்தங்களாக நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்கள் அரசியல்வாதிகளின் முழுமையான ஆதரவுடனும் பாதுகாப்புடனும் வளர்ந்துள்ளதாக ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.
80-களில் சாதாரண ஆயுதங்களுடன் இருந்த குற்றக் குழுக்கள், இன்று அதிநவீன தானியங்கி துப்பாக்கிகளைக் கையாளும் அளவுக்கு சர்வதேச வலையமைப்பாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இவற்றை ஒழிப்பது சில மாதங்களில் சாத்தியமில்லை எனினும், அரசாங்கம் இதற்கான கடுமையான மற்றும் நிலையான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறினார்.
இலங்கை மண்ணில் இருந்து போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றக்குழுக்கள் முழுமையாக வேரோடு பிடுங்கி எறியப்படும் என அவர் உறுதியளித்தார்.