யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ; கோரிக்கையுடன் காத்திருக்கும் மக்கள்
யாழ்ப்பாணத்திற்கு நாளை (17) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுர , யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் உரையாடி அப்பகுதி விவசாய காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
படையினர் கெடுபிடி - ஜனாதிபதி தலையிட கோரிக்கை
கடந்த மார்ச் மாதம் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வலி. வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் உள்ள ஒரு பகுதி விவசாய காணிகளை விடுவித்து, விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.
'உறுமய' காணி வழங்கப்படும் திட்டத்தின் ஊடாக ஒட்டகப்புலம் பகுதியில் 408 குடும்பங்களுக்கு 235 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்பட்டது. விவசாய நடவடிக்கைக்காக பலாலி வடக்கு, பலாலி கிழக்கு, பலாலி தெற்கு, வயாவிளான் மேற்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் காணிகள் விடுவிக்கப்பட்டன.
எனினும் குறித்த விவசாய காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினர் கடுமையான நிபந்தனைகளுடன், கட்டுப்பாடுகளை விதித்தே விவசாய நிலங்களுக்கு மக்களை அனுமதித்துள்ளனர்.
குறிப்பாக, பின்மாலை பொழுதுகளின் பின்னர் காணிகளுக்குள் நிற்க முடியாது, விவசாய நிலங்களில் ஓய்வு எடுப்பதற்கு தற்காலிக கொட்டகைகளை அமைக்க அனுமதியில்லை, போன்ற கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன.
அத்துடன் குறித்த காணிகளை சுற்றி உயர் பாதுகாப்பு வலய வேலிகள் அகற்றப்படாமல் இருப்பதனால், சுற்று பாதைகள் ஊடாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலைமைகளும் காணப்படுகிறது.
உயர் பாதுகாப்பு வேலிகளை பின் நகர்த்த 18 மில்லியன் ரூபாய் செலவு என இராணுவத்தினர் மதிப்பீடு செய்து, நிதி கோரியுள்ள நிலையில், அந் நிதி இராணுவத்தினருக்கு வழங்கப்படாமையால், இராணுவத்தினர் வேலியை நகர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி, யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் கலந்துரையாடி, விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்குள் சுதந்திரமாக சென்று விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.