இலங்கையில் உயிரோடு இருக்கும் அரசியல் பிரபலத்திற்கு கண்ணீர் அஞ்சலி!
வடமேல் மாகாண ஆளுநராக இருந்த ராஜா கொல்லுரே உயிரிழந்த நிலையில், அவருக்கு பதிலாக உயிரோடுள்ள முஸம்மிலின் படத்தை உள்ளடக்கிய வாரியபொல பிரதேச சபையினர் அனுதாப பதாகை அடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
வடமேல் மாகாண ஆளுநராக இருந்த, நாட்டின் சிரேஷ்ட கம்யூனிச அரசியல்வாதியாகவும் இருந்த ராஜா கொல்லுரே கொவிட் 19 தொற்றால் இன்று உயிரிழந்தார். கடந்த வாரம், தொற்றினால் பாதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமடைந்ததால் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஆளுநர் ராஜா கொல்லுரே இன்று காலை உயிரிழந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து வடமேல் மாகாணம் முழுவதிலும் உள்ள பிரதேச சபைகள், மாநகர சபைகள் போன்றவற்றில் உயிரிழந்த ஆளுநருக்கு அனுதாப பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
அவ்வாறே ராஜா கொல்லூரேவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வாரியபொல பிரதேச சபையின் தலைவர், செயலாளர் மற்றும் சபையின் உறுப்பினர் பதாகையொன்றை காட்சிப்படுத்தினர். தமது அனுதாப பதாகையில் ராஜா கொல்லுரேவின் புகைப்படத்திற்கு பதிலாக வடமேல் மாகாண முன்னாள் ஆளுநரும், ஊவா மாகாணத்தின் தற்போதைய ஆளுநருமான ஏ.ஜே.எம் முஸம்மிலின் புகைப்படத்தை காட்சிப்படுத்தியுள்ளனர்.
இதேவெளை அந்த பிரதேச சபையின் உறுப்பினர்களில் ஒருவர் கூட தமது மாகாணத்தின் ஆளுநரின் புகைப்படத்தை இதுவரை பார்த்ததில்லையா என பல்லரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் குறைந்த பட்சம் ஆளுநருக்கு இரங்கல் தெரிவிக்கும் பதாகையை கூட சரியாக நிர்வகிக்க முடியாத பிரதேச சபையிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியுமா எனவும் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.