தீருவில் திடலை மாவீரர் நாளுக்கு வழங்க முடியாது; கைவிரித்த நகரசபை
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் திடலில் மாவீரர் நாள் நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என வல்வெட்டித்துறை நகர சபை தலைவர் ச. செல்வேந்திரா தெரிவித்துள்ளார்.
தீருவில் திடலை மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு வழங்க வேண்டாம் என வல்வெட்டித்துறை பொலிஸார் கோரியதால், நகர சபை தலைவர், திடலை கொடுப்பதற்கான அனுமதியை மறுத்துள்ளார்.
வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், மாவீரர் நாளான எதிர்வரும் 27ஆம் திகதி தீருவில் மைதானத்தில் நிகழ்வுகளை முன்னெடுக்க நகர சபையிடம் அனுமதி கோரி இருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் முகமாக “இம்மாத இறுதி வரை தீருவில் மைதானத்தில் எந்த நிகழ்வுகளையும் நடாத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வல்வெட்டித்துறை பொலிஸாரினால் தனக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையால், தங்கள் கோரிக்கை தொடர்பில் சாதகமாக பரிசீலிக்க முடியாது என்பதனை தெரிவித்து கொள்வதாக” நகர சபை தலைவரால் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எழுத்து மூலம் , அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது..