விமான எரிபொருளை விநியோகிக்கும் அரசியல்வாதியின் புதல்வர்:டொலர் வருமானத்தை இழந்த பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
பிரபல அரசியல்வாதியின் புதல்வருக்கு சொந்தமானது எனக்கூறப்படும் தனியார் நிறுவனம் இறக்குமதி செய்துள்ள விமானங்களுக்கான எரிபொருளை வரலாற்றில் முதல் முறையாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக விற்பனை செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
டொலர் வருவாயை இழந்த பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
இதன் காரணமாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு டொலர் வருவாய் கிடைத்து வந்த விமானங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
40 ஆயிரம் மெற்றி தொன் எரிபொருளை ஏற்றி வந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த பின்னர், அதில் இருந்த எரிபொருள் கொலன்னாவையில் உள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தானத்தின் களஞ்சியத்திற்கு குழாய் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கிருந்து தொடருந்து மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் களஞ்சியத்திற்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த எரிபொருளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விமானங்களுக்கு எரிபொருளை வழங்கும் பிரிவு கடந்த வாரம் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.
எரிபொருளை விமானங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் டொலர் வருவாய் அதனை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு கிடைக்கும்.
விநியோக நடவடிக்கைகளுக்காக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இலங்கை ரூபா மூலம் கட்டணம் செலுத்தப்படும் எனவும் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் கூறியுள்ளார்.
அந்நிய செலாவணி தட்டுப்பாட்டால் விமான எரிபொருள் இறக்குமதியை நிறுத்திய கூட்டுத்தாபனம்
சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் சுத்திகரித்து பெறப்படும் விமானங்களுக்கான எரிபொருள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமே விமானங்களுக்கு நேரடியாக விநியோகித்து வந்தது.
இதன் மூலம் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெருமளவில் டொலர் வருவாய் கிடைத்து வந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி தட்டுப்பாடு தொடர்பான நெருக்கடி காரணமாக விமானங்களுக்கான எரிபொருள் இறக்குமதியை கூட்டுத்தாபனம் நிறுத்தி இருந்தது.
இந்த நிலையில் தனியார் நிறுவனம் ஊடாக விமானங்களுக்கபன எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.