யாழில் வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார்! சிக்கிய இரு இளைஞர்கள்
யாழ். கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கு நடாத்திய தேடுதலில் போதைப்பொருட்களை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிலிருந்து 500 கிராம் கேரள கஞ்சா, 100 கிராம் ஹெரோயின், 6 போதை மாத்திரைகள், போதை மருந்தேற்ற பயன்படுத்தப்படும் ஊசிகள் என்பன மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கோண்டாவில் செபஸ்டியன் வீதியில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் 50,000 ரூபாய் பணத்துடன் இன்றையதினம் (01-01-2023) யாழ் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து சந்தேக நபரின் வீடு கோப்பாய் பொலிஸார் மற்றும் மோப்ப நாய் சகிதம் தீவிர தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டபோது போதைப்பொருட்கள் சில கைப்பற்றப்பட்டது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 24 மற்றும் 21 வயதான இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், கைதானவர்களில் ஒருவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் போதைப்பொருள் வியாபாரி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.