தப்பியோட முயன்ற கைதி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
கல்கமுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட முயன்ற சந்தேக நபர் மீது பொலிஸார் இன்று (3) மதியம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிலரை பொலிஸ் நிலையத்திலிருந்த ஜீப் வண்டியில் ஏற்றச் சென்றபோது, விலங்கிடப்பட்டிருந்த இருவர் இவ்வாறு தப்பியோட முயன்றுள்ளனர்.
சந்தேக நபர்கள் பொலிஸ் நிலையத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 75 மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடி தப்பிக்க முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு சந்தேக நபரின் முழங்காலுக்குக் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் கோஜராகம, கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய, போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.