யாழில் வேடிக்கை பார்த்த மக்கள் மத்தியில் பொலிஸ் உத்தியோகத்தரின் துணிகரம்
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் குழுவொன்றினால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்று (8) காலை நடந்தது. இளைஞன் தாக்கப்பட்ட போது ஏராளமான பொதுமக்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்த்த போது, அந்த பகுதியால் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துணிச்சலாக செயற்பட்டமை பாராட்டை பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று காலை இளைஞன் ஒருவரை 3 பேர் கொண்ட குழுவொன்று சுற்றிவளைத்து கடுமையாக தாக்கியுள்ளது.

தலைக்கவசத்தினால் தாக்கப்பட்ட இளைஞன்
தலைக்கவசத்தினால் தாக்கப்பட்ட இளைஞன் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். பண்டத்தரிப்பு நகரத்தில் நடந்த இந்த சம்பவத்தை, ஏராளமான பொதுமக்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.
கடமை முடித்து சிவில் உடையில் சென்று கொண்டிருந்த இளவாலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தரான மதுராஜ், இந்த மோதல் சம்பவத்தை அவதானித்து, விரைவாக செயற்பட்டு, தாக்கப்பட்ட இளைஞனை காப்பாற்றி தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை விரட்டிச் சென்று, ஒருவனை மடக்கிப் பிடித்துள்ளார்.
மடக்கிப் பிடிக்கப்பட்ட இளைஞன் இளைவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் ,தாக்கப்பட்ட இளைஞன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.